Wednesday, March 7, 2012

யுகங்களை மாற்றினாய்...


      
    யுகங்களை மாற்றினாய்...
                 ( சு.தளபதி )
·       பேருந்து நிறுத்தங்களில்
மின்ரயில்நிலைய நடைமேடைகளில்
நீண்ட-அகல படிக்கட்டுகளில்
நெருக்கடி இடங்களில்
உருக்குலையாமல் கிடக்கும்
ஒற்றை ரோஜாக்கள்.

·       அப்பனாகி தலைவியாய்
தவிக்கும் தருணங்களில்,
ஒப்பனைகளையும் மீறி
உழைப்புக்கு ஓடி,
உபரி வருமானத்தால்..
ஏன்.
அது ஒற்றை வருமானமாகக்கூட
இருக்கலாம்?

·       சார்ந்து நின்றே
சோர்ந்துபோன-உன்
சாயல் மாறியது.

·       மையல் கொள்ளும்
மயக்கம் மாறி
மையப்படுத்தப்படுகிறாய்.

·       மனிதகுலம்தானா
என்ற ஐயம் மாறி
மனிதவளமாக
மதிக்கப்படுகிறாய்.

·       சக்தி சொரூபங்களாய்..
     உமையொரு பாகனாய்..
          கடவுளாலும் காணமுடியாத போது
     காலத்தாலும் கருத்தாலும்
     கண்டும் கவனிக்கவும் படுகிறாய்.

·       தேசமென்றோம்...
தேகமென்றோம்...
சொந்தம் கொண்டாடவும்
சுகப்படவும்.

·       சுத்தமென்று
அசுத்தமாக்கியதும்,
தாய் என்று போற்றி
அழகென்று அடிமையாக்கி
பொறுமை என்று புகழ்ந்து
இயற்கை என்று ஏற்றி
கொண்டாடி..கொண்டாடி..
தொடர்ந்து உன்னை
தொண்டாற்றச் செய்தோம்.

·       அணு ஆற்றலை
நுகர்பொருளாய்..
ரசனைகளின் நுனுக்கங்களில்,
மறுபுறம் மறைத்து
ரசம்பூசி வைத்தோம்.

·       வெடித்தெழுந்து அடுக்கடுக்காய்
களங்களில் காளிகளாகி
வதங்களின் வாகைகளால்
யுகங்களை மாற்றினாய்

-    சு.தளபதி.

No comments:

Post a Comment