யுகங்களை மாற்றினாய்...
( சு.தளபதி )
· பேருந்து நிறுத்தங்களில்
மின்ரயில்நிலைய நடைமேடைகளில்
நீண்ட-அகல படிக்கட்டுகளில்
நெருக்கடி இடங்களில்
உருக்குலையாமல் கிடக்கும்
ஒற்றை ரோஜாக்கள்.
· அப்பனாகி தலைவியாய்
தவிக்கும் தருணங்களில்,
ஒப்பனைகளையும் மீறி
உழைப்புக்கு ஓடி,
உபரி வருமானத்தால்..
ஏன்.
அது ஒற்றை வருமானமாகக்கூட
இருக்கலாம்?
· சார்ந்து நின்றே
சோர்ந்துபோன-உன்
சாயல் மாறியது.
· மையல் கொள்ளும்
மயக்கம் மாறி
மையப்படுத்தப்படுகிறாய்.
· மனிதகுலம்தானா
என்ற ஐயம் மாறி
மனிதவளமாக
மதிக்கப்படுகிறாய்.
· சக்தி சொரூபங்களாய்..
உமையொரு பாகனாய்..
கடவுளாலும் காணமுடியாத போது
காலத்தாலும் கருத்தாலும்
கண்டும் கவனிக்கவும் படுகிறாய்.
· தேசமென்றோம்...
தேகமென்றோம்...
சொந்தம் கொண்டாடவும்
சுகப்படவும்.
· சுத்தமென்று
அசுத்தமாக்கியதும்,
தாய் என்று போற்றி
அழகென்று அடிமையாக்கி
பொறுமை என்று புகழ்ந்து
இயற்கை என்று ஏற்றி
கொண்டாடி..கொண்டாடி..
தொடர்ந்து உன்னை
தொண்டாற்றச் செய்தோம்.
· அணு ஆற்றலை
நுகர்பொருளாய்..
ரசனைகளின் நுனுக்கங்களில்,
மறுபுறம் மறைத்து
ரசம்பூசி வைத்தோம்.
· வெடித்தெழுந்து அடுக்கடுக்காய்
களங்களில் காளிகளாகி
வதங்களின் வாகைகளால்
யுகங்களை மாற்றினாய்
- சு.தளபதி.
No comments:
Post a Comment