Wednesday, March 14, 2012

உண்டடா உலகு

          நிலையில்லா உலகத்தில் நீ நிலைத்து நிற்பாய் வரலாற்றில். எவ்வாறு தெரியுமா?  இனவெறி பிடித்த மனிதநெறி மறந்த மானுட மிருகமென்று ! . பொறுப்பைப் பயன்படுத்தி, மனிதகுலத் துரோகமாகத் தொடர்குற்றம் புரியும் அவனைத் தட்டிக்கேட்காமலும், அவனைத் தவறு செய்யாதவாறு தடுக்காமலும், மறைமுகமாகத் துணை நிற்கும் அண்டை அயோக்கியர் சூழ்ந்த உலகமே!

         சொந்தமண், சுமந்த பெற்றோர், பழகிய வாழ்க்கை, பாடுபட்ட  பிணைப்பு எல்லாம் சிதைத்த,  செந்நீர் அருந்தும் சினத்தீயே! இருப்பவர்களைப்  பற்றி சிந்திக்க வருவதாய் கபட நாடகமாடகிறாய். இழந்தவர்களைப் பற்றி, நாங்கள்பெறப் போவதைப்பற்றிச் சிந்திக்கிறோம். நடந்தனவெல்லாம் கதை என்கிறாயே, கடந்தனவெல்லாம் வரலாறு. வருங்காலம் வாசிக்க மறந்தாலும், எதிர்காலச் சொந்தங்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்று சொல்லிக்
கொடுக்கும். குற்றங்கள் மீது உனக்கே பற்று நீங்கலாம். ஆனால் நீ குற்றவாளி என்பதிலிருந்து எவ்வாறு நீங்குவாய் ? நீயே விலகிச்செல்! நீயே மறைவாக மாண்டுபோ. மீண்டு வருவாய் என்றெண்ணி, மிஞ்சியிருக்கும் உன் இனம் அழிக்காதே!

         அயலவர் எல்லோரும், உன்னைக் கயவன் என்று சொல்லும் போது, அருகிலிருப்பவன் துணைக்காக, உன்னைத் தூயவன் என்பது, உங்கள் வாழ்க்கைப் பிழையல்ல, வரலாற்றுப்பிழை.  மன்னிப்பு என்பது உங்கள் மறுபிறவி வாழ்க்கையிலும் மறுக்கப்பட்டது. உண்டடா உலகு. திண்டாடும் நிலை வந்தாலும், துண்டாட நினைத்தாலும் உண்டடா உலகு. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின் தருமமே வெல்லும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி அழிக்கும். நேற்று உள்ளது இன்று இல்லை என்பது தானடா உலகத்தின் பெருமை. அநீதி உலகின் விளிம்பில் நிற்கும் நீவிர் நினைவில் கொள்க. 

           தமிழும் சரி தமிழனும் சரி உங்களுக்குப் பிடிக்காது. எம்மை அண்டிப் பிழைக்க வந்து ஆண்டையாய் ஆகிடத் துடிக்கும் ஆசையால்.  தமிழன் இரக்க உணர்வு படைத்தவன். இறக்க நிறைவு படைத்தவன் என்பதால் மலிவாக எண்ணிடாதே மானிடமே!

Wednesday, March 7, 2012

யுகங்களை மாற்றினாய்...


      
    யுகங்களை மாற்றினாய்...
                 ( சு.தளபதி )
·       பேருந்து நிறுத்தங்களில்
மின்ரயில்நிலைய நடைமேடைகளில்
நீண்ட-அகல படிக்கட்டுகளில்
நெருக்கடி இடங்களில்
உருக்குலையாமல் கிடக்கும்
ஒற்றை ரோஜாக்கள்.

·       அப்பனாகி தலைவியாய்
தவிக்கும் தருணங்களில்,
ஒப்பனைகளையும் மீறி
உழைப்புக்கு ஓடி,
உபரி வருமானத்தால்..
ஏன்.
அது ஒற்றை வருமானமாகக்கூட
இருக்கலாம்?

·       சார்ந்து நின்றே
சோர்ந்துபோன-உன்
சாயல் மாறியது.

·       மையல் கொள்ளும்
மயக்கம் மாறி
மையப்படுத்தப்படுகிறாய்.

·       மனிதகுலம்தானா
என்ற ஐயம் மாறி
மனிதவளமாக
மதிக்கப்படுகிறாய்.

·       சக்தி சொரூபங்களாய்..
     உமையொரு பாகனாய்..
          கடவுளாலும் காணமுடியாத போது
     காலத்தாலும் கருத்தாலும்
     கண்டும் கவனிக்கவும் படுகிறாய்.

·       தேசமென்றோம்...
தேகமென்றோம்...
சொந்தம் கொண்டாடவும்
சுகப்படவும்.

·       சுத்தமென்று
அசுத்தமாக்கியதும்,
தாய் என்று போற்றி
அழகென்று அடிமையாக்கி
பொறுமை என்று புகழ்ந்து
இயற்கை என்று ஏற்றி
கொண்டாடி..கொண்டாடி..
தொடர்ந்து உன்னை
தொண்டாற்றச் செய்தோம்.

·       அணு ஆற்றலை
நுகர்பொருளாய்..
ரசனைகளின் நுனுக்கங்களில்,
மறுபுறம் மறைத்து
ரசம்பூசி வைத்தோம்.

·       வெடித்தெழுந்து அடுக்கடுக்காய்
களங்களில் காளிகளாகி
வதங்களின் வாகைகளால்
யுகங்களை மாற்றினாய்

-    சு.தளபதி.