தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பேரா.முனைவர்.ம. திருமலை ஐயாவிற்கு வணக்கத்துடன் வாழ்த்துக்களை வழங்குவது, இந்நாள் பேராசிரியர் ஐயாவின் முன்னாள் மாணவர் சு. தளபதி.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழுக்குச் செய்த தொண்டு தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆசிரியர் - மாணவர் உறவு நிலை உயர்வுப் பண்பாட்டை உருவாக்கிய தமிழ்த்துறையில் பெருமைக்குரியப் பேராசிரியர்கள் பலருண்டு. எண்பதுகளில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் ஒரு குழு , அங்கேயே உருவான மாணவர்கள், பின் ஆய்வாளர்கள், பின் முனைவர் பட்டங்களுடன் அங்கேயே விரிவுரையாளர்கள்.. இப்படி வந்த குழுவில் ஒருவர்தான் திருமலை ஐயாவும். அவர்களது நட்பு, அவர்களது அறிவுத்திறனின் தனித்தன்மைகள், மாணவர்களாக இருந்த, அவர்களது பேராசிரியர்களுடனேயே பணியாற்றும் பெருமை..., இதையெல்லாம் பார்த்து, மனதுக்குள் பெருமிதம் கலந்த, தாங்களும் அதுபோல் ஆகவேண்டும் என்ற ஏக்கம் நிறைந்தவர்களாக அக்கால கட்டத்தில் மாணவர்களாக இருந்தவர்களில் நானும் ஒருவன். அது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, மாணவர்களுக்கும் மதிப்பு மிகுந்த காலம்.
நாங்கள் முதுகலை மாணவர்களாகச் சேர்ந்த ஆண்டில்(1986-87) திருமலை ஐயாவிற்குத் திருமணம். தமிழ்த்துறையே குடும்பமாகக் கொண்டாடியது. அவரது குல வழக்கப்படி நடந்த அத்திருமணக் காட்சிகள் இன்றும் எங்கள் மனதில் மகிழ்வூட்டும் காட்சிகளாக உள்ளன.
மிக இயல்பான மனிதர். தற்கால இலக்கியத் தாகம் தீராத தீவிர வாசிப்பு உடையவர். வகுப்பில் ஒரு நாவலைப் பற்றி விவரித்தால் போதும் நாங்கள் ஒரு படம் பார்த்ததைப்போல் உணர்வோம். எங்களைப் பல நாவல்களை வாசிக்கத் தூண்டியவர். வகுப்பறை தவிர, விடுதி - விளையாட்டு- விடுமுறை- சந்திப்புகளில், நாங்கள் குறிப்பாக நண்பர்கள் அழகிரி, ராஜபாண்டி, ரவி, முருகன் ஐயாவின் முகபாவனைகளில் செய்திகளைச் சொல்லிக்காட்டி ரசிப்போம்.
ஐயாவின் எளிமை, யதார்த்தம், கடின உழைப்பு, உதவும் மனநிலை இவையெல்லாம் அவரது கற்பித்தலுக்கும் கூடுதலாக அவர் எங்களுக்குத் தந்த பண்புகள். படித்த பல்கலையிலேயே பணியாலும் உயர்ந்த பேராசிரியர் இன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கே துணைவேந்தராக உயர்ந்ததில் உள்ளார்ந்த மகிழ்வை.. வாழ்த்தை.. வணக்கத்தை என் சார்பாகவும் என் நண்பர்கள் சார்பாகவும் தெரிவிக்கிறேன்.