Sunday, September 11, 2011

மகாகவி பாரதி

     தமிழன் ஏன் தவறை திருத்திக்கொள்ளவே முன் வருவதில்லை? பாரதியாரின் நினைவு நாளை  செப்டம்பர் 12 ஆம் நாள் தான் கொண்டாட வேண்டும். செப்டம்பர் 11 இல் கொண்டாடுவது தவறு . காலண்டர் முதற்கொண்டு அரசு அறிவிப்புகள் வரை கல்வி நிலையங்கள் உட்பட இந்தத் தவறை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பலர் பல முறை இதற்கான ஆதாரங்களை எடுத்துரைத்து, விளக்கிய போதும், சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்காதமை மிகுந்த வருத்தமளிக்கிறது. 11ஆம் நாள் நள்ளிரவுக்குப்பின் 1.30  மணிக்கு மேல் தான் பாரதியார் காலமானார் என்பது தான் உண்மை.12ஆம் நாள் அதிகாலையில் தான் இச்செய்தி மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

        பாரதி தமிழ்ச்சமூகத்தின் தொலைநோக்கர். தமிழனுக்குச் சொல்லிச் சென்ற, மூன்று கடமைகள்.  பெயர்த்தல், இயற்றல், செய்தல் ஆகிய மூன்றாகும்.

                                 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
                                 தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்                                                                                 
                                இறவாத புகழுடைய புதுநூல்கள்
                                தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

                               திறமான புலமையெனில் வெளி நாட்டோ ர்
                              அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

         இவை  தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமல்ல,  தமிழ்ச்சமூகத்தின் மொத்தமான வாழ்வுக்கும் தான்.  உலகின் நல்ல விஷயங்களைத் தமிழ்ச்சமூகத்திற்குக் கொண்டு வர வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத நல்ல காவியங்களை மட்டுமல்ல நல்ல காரியங்களையும் இயற்றிட வேண்டும்.  வெளி நாட்டவர்கள் எல்லாரும் வரவேற்கும் படியான செயல்களைச் செய்ய வேண்டும். இவற்றைச்செய்தால் உலகின் உச்சத்தில் தமிழ்ச்சமூகம் நிற்கும். பாரதியாரின் நினைவு நாளில் இவற்றை நம் தலைமுறைக்கு  உணர்த்த வேண்டும்.

    கற்களை மனங்களாகக் கொண்டவர்கள் மத்தியில் சொற்களை ஏவிச் சுதந்திரம் கேட்ட பாரதி, பகைவனுக்கு அருள்வாய் இறைவா.. எனவும் வேண்டியவர். 38 ஆண்டுகளே வாழ்ந்த, பன்மொழிப்புலராக.. பல்வேறு கலை இலக்கியச் சோதனைகளை நிகழ்த்தியவராக.. தேசிய விடுதலைக்குப் பாட்டுப்படை நடத்தியவராக...தான் வாழும் சமூகத்தைச் சீர்திருத்தியவராக.. ஒரு மாபெரும் உலகக் கவிஞன் தமிழனாகப் பிறந்ததில் நமக்குப் பெருமைதானே... வாழ்க! பாரதியின் புகழ்!



No comments:

Post a Comment